உதகையிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முதல் விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மோகன்குமார் முன்னிலையில் ரெக்ஸ் பள்ளித் தாளாளர் அடைக்கலம் தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக மண்டல மேலாளர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளின் சிறப்பு விற்பனைக்காக கோ-ஆப்டெக்ஸின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஜனவரி 31-ஆம் தேதி வரை 30 சத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனையாக கோவை மண்டலத்தில் ரூ. 6.55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டில் விற்பனை இலக்காக ரூ. 8 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை விற்பனை நிலையத்தில் ரூ. 25 லட்சத்துக்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான விற்பனை இலக்காக ரூ.32 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த பணியாளர்களுக்கு கடன் வசதி உள்ளது என்றார். பேட்டியின்போது, உதகை விற்பனை நிலைய மேலாளர் சபீனா நாஸ் உடனிருந்தார்.