கூடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கூடலூர், கோத்தர் வயல் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பிரமணியம். இவர் கடந்த 15 நாள்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு பெங்களூரூவில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
வீட்டிலுள்ள பூந்தோட்டத்தைப் பராமரிக்க அருகில் வசிப்பவரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அருகில் வசிப்பவர், சுப்பிரமணியம் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பின் பகுதியிலுள்ள ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. உள்ளே பார்த்தபோது பொருள்கள் சிதறிக்கிடந்துள்ளன. உடனே பெங்களூரூவிலுள்ள சுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது
பீரோவிலிருந்த 3 பவுன் நகை, மடிக்கணினி, டிவி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். உதகையிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.