மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் அரசுப் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
உதகை, குன்னூரில் இருந்து குந்தா தாலுகாவுக்கு உள்பட்ட கோரகுந்தா, கீழ்குந்தா, மஞ்சூர், எடக்காடு, கிண்ணக்கொரை, அப்பர்பவானி, இரியசீகை ஆகிய பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தங்காடு, கோவையில் இருந்து கீழ்குந்தா, மஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கும் அரசுப் பேருந்துகள் தினமும் காலை முதல் இரவு இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மதியம் முதல் பேருந்துகளை இயக்கவில்லை.
இதனால் உதகை, குன்னூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றவர்கள், பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதியுற்றனர்.
இதனால் கிண்ணக்கொரை, இரியசீகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தனியார் வாகனங்களில் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து வாடகைக்கு வாகனங்களை எடுத்துச் சென்றனர்.