லாரி மோதியதில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன். இவரது மகன் தினேஷ்குமார் (14). இவர், அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்கேற்ற தினேஷ்குமார் மதிய உணவுக்காக அன்னூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி தினேஷ்குமார் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அன்னூர்-அவிநாசி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைபாதைக் கடைகளை காவல் துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
இதுகுறித்து, லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த யாரப் (27) மீது அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.