குந்தா, பந்தலூரில் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் அமைக்கப்படும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பந்தலூர் வட்டங்களில் விரைவில் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அமைக்கப்படும் என விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. இதில், விவசாயிகளின் 49 கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
இதில், தோட்டக்கலைத் துறை சார்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் தாலுகாக்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் உள்ளன. அதேபோல், குந்தா மற்றும் பந்தலூர் தாலுகாக்களிலும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் அமைப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கும் வகையில் சென்னையிலுள்ள தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் தேனீ பெட்டி, தேன் பிழியும் இயந்திரம் ஆகியவை இதுவரை 38 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டத்திலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டது.
வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து ஜனவரி 5ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72, உதகை-1 என்ற அலுவலக முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.