கோடைக்கால மலை ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்க வலியுறுத்தும் இணைய தள மனுவில் வெளிநாட்டவர் பலரும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் முதல் உதகை இடையேயான மலை ரயிலில் பயணிப்பது சுற்றுலாப் பயணிகளின் முக்கிய பொழுதுபோக்காக உள்ளது. தினசரி காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கும், மதியம் 2.20 மணிக்கு உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் என ஒருமுறை மட்டுமே மலை ரயில் இயக்கப்படுகிறது.
ஏப்ரல், மே கோடை சீசனில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தினசரி காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயில் போக்குவரத்து கடந்த நான்கு ஆண்டுக்கு முன் ரத்து செய்யப்பட்டது.
பயணிகள் மத்தியில் மலை ரயிலுக்கான மவுசு அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு கோடை சிறப்பு மலை ரயிலை இயக்க வேண்டும் என மலை ரயில் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நீலகிரி எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் அதன் நீலகிரி மாவட்டத் தலைவர் எம்.கண்ணன் இக்கோரிக்கை தொடர்பான மனுவை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலமாக மக்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றனர். இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாட்டவர் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
நீலகிரி மலை ரயிலைப் பாதுகாக்க சிறப்பு ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என வெளிநாட்டவர் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே இந்த சிறப்பு ரயில் இயக்கத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.