நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
முன்னாள் படைவீரர்களுக்கு அரசுத் துறை அலுவலகங்கள், பொது நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறும் நோக்குடனும், சுயதொழில் தொடங்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் பயிற்சி, கணிணிப் பயிற்சி, செல்லிடப்பேசி
பழுது நீக்குதல் பயிற்சி, தொழில்முனைவோர் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும், முன்னாள் படைவீரர்கள் விருப்பப்படும் பயிற்சிகளையும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் அளித்து வருகிறது. இப்பயிற்சி பெற விரும்புவோருக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கப்படும். பயிற்சிக்குரிய கட்டணத்தை டெக்ஸ்கோ நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியினை அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் வழியாக டெக்ஸ்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. விருப்பமான பயிற்சியில் சேர்ந்து பயனடைய முன்னாள் படைவீரர்கள், சென்னையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் கழகப் பொது மேலாளரை தபால் மூலமாகவோ அல்லது texcoaacts000gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.