ஜிஎஸ்டி நண்பன் என்ற புதிய சேவை மையத்தை உதகையில் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடக்கி வைத்தார்.
நாட்டின் முக்கிய வரி சீர்திருத்த திட்டமான ஜிஎஸ்டி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதையொட்டி, இச்சட்டம் தொடர்பான வழிமுறைகள், சந்தேகங்கள் குறித்து பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் தெளிவுபடுத்தும் வகையில், நீலகிரி வணிக வரி மாவட்டத்தில் ஜிஎஸ்டி நண்பன் என்ற வணிக வரி சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, வணிகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வரி ஆலோசகர்களிடம் ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் வெளியிட்டார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கூறுகையில், நீலகிரி வணிக வரி மாவட்டத்தில் உள்ள 5 வரி விதிப்பு வட்டங்கள், துணை ஆணையர் அலுவலக சேவை மைய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி குறித்த கூடுதல் சந்தேகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.