மஞ்சூர் அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் 3-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு கே.கே.நகரைச் சேர்ந்தவர் ஜோதி மகன் சுரேஷ் (25). இவர், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதையறிந்த அப்பெண்ணின் கணவர், அவர்களது உறவினர்கள் சுரேஷைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, கிராம மக்கள் முன்னிலையில் சுரேஷ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனால், மனமுடைந்த சுரேஷ் உதகையில் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, உதகை அரசு மருத்துவமனையில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுரேஷ் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
தனது மகனின் சாவுக்கு அப்பெண்ணின் கணவர் உள்ளிட்டோர் காரணம் என்று கூறியும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் சுரேஷின் சடலத்தை வாங்க மறுத்து அவரது தந்தை ஜோதி, உறவினர்கள் தொடர்ந்து 3-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யாவிடம் சுரேஷின் தந்தை ஜோதி உள்ளிட்டோர் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதில் சமாதானம் அடையாத ஜோதி மகனின் சடலத்தை வாங்க மறுத்துவிட்டார். மேலும், இதுதொடர்பாக ஜோதி அளித்த புகாரின்பேரில் உதகை, எமரால்டு ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.