நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் பசுந்தேயிலையை வாங்க மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் ஐ.போஜன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் தேயிலை விவசாயிகளிடமிருந்து பசுந்தேயிலையை வாங்காமல்
கதவடைப்பு செய்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்காடி, நீதிமன்றத் தீர்ப்பின்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுந்தேயிலை விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது. ஆனால், இக்குழு செய்த பரிந்துரையை தேயிலைத் தொழிற்சாலைகள் கடந்த 2 மாதங்களாக அமல்படுத்தாததோடு, நிர்ணயம் செய்த விலையையும் வழங்காமல் அதற்கு குறைவான விலையையே வழங்குகின்றனர். இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.