நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 14 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கள ஆய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்காக குன்னூர் நகராட்சியில் 3 குழுக்களும், உதகை, நெல்லியாளம் நகராட்சியில் தலா 2 குழுக்களும், கூடலூர் நகராட்சியில் ஒரு குழுவும் என மொத்தம் 8 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இக்குழுவினர் சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்களை ஆய்வு செய்து அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ததுடன், அதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள சுற்றுச் சூழல் சார்ந்த துணிப் பைகளை வழங்கினர். இந்த ஆய்வின்போது சுமார் 14 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அதற்காக ரூ. 16,250 அபராதம் வசூலிக்கப்பட்டது.