மஞ்சூர் அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
மஞ்சூர் அருகே எமரால்டு மின்வாரிய குடியிருப்பில் பகுதியில் குடிநீர் இணைப்பு பணிக்காக 30-க்கு மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், எமரால்டு கூட்டுக் குடிநீர்த் திட்ட பணிகளை மேற்கொள்ள ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எமரால்டு குடியிருப்பில் இருந்து முள்ளிகூர் கிராமத்துக்கு டிராக்டரில்
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சிவசக்தி நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகிலிருந்த 10 அடி பள்ளத்தில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது.
இதில், டிராக்டர் ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஒமலூரைச் சேர்ந்த நல்லப்பன் மகன் சபரி (26), அதே பகுதியைச் சேர்ந்த தர்மன், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த கோபன்மந்து மகன் சுதன்மந்து (35), சுராஜ் (26), மாஸ்கோ (28), சந்திப் (30), சுடலை (30) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பிக்கட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சபரி, சுதன்மந்து, சுராஜ் ஆகியோரை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.