உதகையில் அதிக முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை வழங்கினார்.
நீலகிரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.சங்கர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக்கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் சார்பில் 87 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், கடந்த வாரத்தில் பெறப்பட்டு தீர்வு காணாமல் உள்ள மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி அதிக முறை ரத்த தானம் வழங்கிய 30 பேருக்கும், ரத்த கொடையாளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 6 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.