அரவேணுபுதூர் குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புப்க் தெரிவித்துள்ளனர்.
கோத்தகிரி, அரவேணு அருகில் உள்ள புதூர், காமராஜ் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விநாயகர் கோயில், தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதே வழித்தடத்தில் பள்ளி மாணவ, மாணவிகளும் பொது மக்களும் சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரப் பணிக்கு தேயிலைத் தொழிற்சாலைகளுக்குச் செல்வோரும் இப்பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும். எனவே, பொது மக்கள் நலன் கருதி இப்பகுதியில் அரசு மதுக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.