உதகையில் உள்ள தனியார் கேளிக்கை பூங்காவான தண்டர் வேர்ல்டில் "டிரிக் ஐ' எனும் புதிய அரங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலமாக சுவரில் ஒட்டப்பட்டுள்ள படங்கள், ஓவியங்களைப் பின்புலமாக வைத்து நிஜத்தில் இருப்பதைப் போலவே புகைப்படம் எடுக்க முடியும். இந்தப் புதிய அரங்கை தண்டர் வேர்ல்டு பூங்காவின் தலைவர் வின்சென்ட் அடைக்கலராஜ் திங்கள்கிழமை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த "டிரிக் ஐ' புகைப்படம் எடுக்கும் முறையில் 2 டி முறையில் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு நிஜத்தில் இருப்பதைப்போல படமெடுக்க முடியும். செல்லிடப்பேசிகளில் சுயபடம் எடுத்துக் கொள்வதைப் போலவே இங்குள்ள 23 ஓவியங்களைப் பயன்படுத்தி வித்தியாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
தற்போதைய சூழலுக்கேற்ற வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருப்பதால் தேவைப்பட்ட நேரத்தில், சூழ்நிலைக்கேற்ப அவற்றை மாற்றிக் கொள்ள முடியும் என்றார்.
இந்தப் பேட்டியின்போது பூங்கா மேலாளர் பாபு நந்தகுமார் உடனிருந்தார்.