பசுந்தேயிலை விலை குறைப்பு: வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்: சிறு தேயிலை விவசாயிகள்
பசுந்தேயிலைக்கு கடந்த ஏப்ரல் மாதத்துக்கான விலையைக் குறைத்து வழங்கியது தொடர்பாக தேயிலை வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிறு தேயிலை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு, கடந்த ஏப்ரல் மாத விலையாக ரூ.17 தேயிலை வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், தனியார் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை வழங்காமல், சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.12 வீதம் மட்டுமே கொடுத்து வருகின்றன. இதனை தேயிலை வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.
தேயிலை தொழிற்சாலைகளிடமிருந்து உரிய பணத்தைப் பிடித்தம் செய்து, சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.