கோத்தகிரி வளம் மீட்பு பூங்கா பகுதியில் சுற்றித் திரியும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி - குன்னூர் சாலையில், தேவாரம் காட்டேஜ் பகுதியில் வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இங்கு, கோத்தகிரி நகரில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, இறைச்சி, உணவுக் கழிவுகளை உண்ணுவதற்காக 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் இப்பகுதியில் சுற்றி வருகின்றன.
குறிப்பாக, தேவாராம் காட்டேஜ், கன்னிகாதேவி காலனி சாலையில் பன்றிகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் நடந்து சென்றுவர அஞ்சுகின்றனர். பழைய உழவர் சந்தை வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்வோரை பன்றிகள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வளம் மீட்பு பூங்காவில் குவியும் உணவுக் கழிவுகளை பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் உடனுக்குடன் குழிவெட்டி புகைக்கவும், காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்தவும் வனத் துறை, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.