தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளன மாநில குழுக் கூட்டம் குன்னூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற சிஐடியூ மாநிலத் தலைவர் செளந்திரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இப்போராட்டத்தில் பெரும்பான்மையாக கலந்துகொண்டனர். பேருந்துகளை இயக்க அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். அதன் பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 1,250 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது, ரூ. 750 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ. 500 கோடி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம், ஊதிய உயர்வு குறித்துப் பேச வேண்டும். பல ஒப்பந்தங்கள் போடப்பட்டும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
ஊழியர்களின் பதவி உயர்வு நிலுவையில் உள்ளது. கோரிக்கைகள் குறித்து விவாதிக்க அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 27-ஆம் தேதி (இன்று) கூடி விவாதிக்கவுள்ளது.
அமைச்சர் பேச்சு வார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும். அரசுத் துறை ஊழியர்களைப் போன்று, போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
பேட்டியின்போது, கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அருணகிரிநாதன், சிஐடியூ மாவட்டச் செயலாளர் ஆல்தொரை ஆகியோர் உடனிருந்தனர்.