நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-ஆவது பழக் கண்காட்சி சனிக்கிழமை (இன்று) தொடங்கவுள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 285 தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த 1,200 தாவர வகைகள் உள்ளன. அரியவகை மரங்களான கேம்பர், காகித மரம், பென்சில்வுட், யானைக்கால் மரம், ஸ்ட்ராபெர்ரி, டர்பன்டைன் மரங்கள் உள்ளன.
இங்குள்ள மரங்களில் ருத்ராட்ச மரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இமயமலை, நேபாளம் போன்ற மலைப் பிரதேசங்களில் காணப்படும் இந்த வகை ருத்ராட்ச மரங்கள் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிம்ஸ் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கவுள்ள 59-ஆவது பழக் கண்காட்சியைக் கண்டு ரசிக்க பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என்பதால் அவர்களைக் கவரும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை சிம்ஸ் பூங்கா நிர்வாகம் செய்து வருகிறது. பழக் கண்காட்சியில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் பூங்காவின் முகப்பில் ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு டன் திராட்சை பழங்களை கொண்டு காளைமாடு, அதனை அடக்கும் இளைஞன் உருவம் அமைக்கப்படுகிறது.
மேலும், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக் கலைத் துறையினர், தங்களது மாவட்டங்களுக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு உருவ மாதிரிகளை உருவாக்கி பொது மக்கள் பார்வைக்கு வைக்கவுள்ளனர்.
மே 28-ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராக தோட்டக் கலைத் துறை இயக்குநர் அர்ச்சனா பட்நாயக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கவுள்ளார்.