குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் 1098 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
உதகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்திடும் சக்தி கல்வி உண்டு. கடின உழைப்பு, ஒழுக்கம், திட்டமிடுதல் ஆகியவற்றை மாணவ, மாணவியர் கடைப்பிடித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான இல்லங்கள், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், குழந்தைக் கடத்தலை தடுத்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல், குழந்தைகள் பிச்சை எடுத்தலைத் தடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
எனவே, எந்தக் குழந்தையும் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் 1098 என்ற எண்ணில் உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், மாணவ, மாணவிகள் அவரவர் பெற்றோரிடம், டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீட்டினையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர், ஆட்சியர் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும், அவசர உதவி தேவைப்பட்டால் தபால் மூலம் தெரிவிக்க வேண்டிய தபால் அட்டையையும் வழங்கினார்.
குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலர்களும், மாணவ, மாணவியரும் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, உதகையிலுள்ள திபெத்தியன் சந்தைப் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்ஆய்வு மேற்கொண்டார்.