பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் பாரம்பரிய மருத்துவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள உப்பட்டி பகுதியில் பாரம்பரிய மருத்துவர்கள் எனக் கூறி, சிலர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலி மருத்துவர்கள் ஒழிப்பு குழுவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.
அதையடுத்து, மருத்துவத் துறை இணை இயக்குநர் ரகுபாபு தலைமையில் உதகை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இரியன் ரவிகுமார், குடும்ப நல துணை இயக்குநர் நிர்மலா, மருந்தாய்வாளர் அமீர், சித்த மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாரம்பரிய மருத்துவர் கண்ணதாசன் (58) என்பவரின் மருந்தகத்தைச் சோதனையிட்டனர். அங்கிருந்த மருந்துகளை பறிமுதல் செய்து தேவாலா காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கண்ணதாசனை கைது செய்துள்ளனர்.