அங்கன்வாடி மையக் கதவை உடைத்து சத்து மாவு சாப்பிட்ட கரடி
மஞ்சூர் அருகே அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து உள்ள புகுந்து குழந்தைகளுக்கான சத்துமாவை சாப்பிட்ட கரடியை அப்பகுதி மக்கள் புதன்கிழமை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
மஞ்சூர் அருகே குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட கெரடாலீஸ் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமம் அடர்ந்த தேயிலைத் தோட்டப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் கதவை புதன்கிழமை உடைத்து உள்ள புகுந்த கரடி, பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக் கதவையும் உடைத்துச் சென்று, குழந்தைகளுக்கான சத்து மாவு மூட்டைகளைப் பிரித்து, அதை சாப்பிட்டது. பின்னர், சத்து மாவு பொட்டலங்களை அப்பகுதியில்
வீசியெறிந்தன. கரடியின் சப்தம் கேட்டு, அப்பகுதிக்குச் சென்ற பொது மக்கள், கரடியை அங்கிருந்து வனப் பகுதிக்குள் விரட்டினர்.
இந்த அங்கன்வாடி மையத்துக்குள் அடிக்கடி கரடிகள் புகுந்து சத்துணவு மாவை சேதப்படுத்தி வருகின்றன. இக்கட்டடத்தின் கதவுகள் துருப்பிடித்து, சேதமாகி உள்ளது. அங்கன்வாடி மையத்துக்கு இரவு நேரத்தில் வரும் கரடி, பகல் நேரத்தில் குழந்தைகள் இருக்கும்போது வந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். அங்கன்வாடி மையத்துக்கு தரமான கதவு பொருத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.