கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டம் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
27 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள 166 ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தை கூடலூரில் அமைக்க வேண்டும். கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கல்வி வளர்ச்சி நிதி புறக்கணிக்கப்பட்டு மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் காவலாளிகள் மற்றும் கழிவறை சுத்தம் செய்ய வேலையாள்களையும் பணி அமர்த்த வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை 27-ஆம் தேதிக்குள் நிரப்பவில்லை எனில் அந்தந்த அரசுப் பள்ளிகள் முன்பு வகுப்புகளைப் புறக்கணித்து பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், அனைத்து அரசுப் பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.