கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சியில் 2-ஆவது நாளாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை.
காந்தி ஜயந்தியையொட்டி, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்கு அலுவலர்கள் திங்கள்கிழமை முதுமலை ஊராட்சியில் உள்ள முதுகுளி கிராமத்துக்குச் சென்றனர். ஆனால், பொதுமக்கள் கிராம சபைப் கூட்டம் நடத்த வேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.
2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை அனைத்துத் துறை அலவலர்கள் அதே இடத்துக்குச் சென்றனர். ஆனால், கூட்டம் நடத்த பொதுமக்கள் யாரும் ஒத்துழைக்கவில்லை.
அப்போது, இந்த ஊராட்சியில் அனுமதியின்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இதுவரை அடிப்படைத் தேவைகளான சாலை, நடைபாதை, தெருவிளக்கு, பாதுகாப்பான குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்து தரப்படவில்லை.
முதுமலை ஊராட்சியில் உள்ள மக்களுக்கான மறு குடியமர்வு திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, இங்கு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டாம் எனக் கூறி மக்கள் அலுவலர்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.