நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்ததைவிட தற்போது 7,081 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
1.1.2018-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு நடைபெறவுள்ள சுருக்க முறை திருத்தத்தின்படி முதல்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
இப்பட்டியலின்படி நீலகிரி மாவட்டத்தில் 2,75,992 ஆண் வாக்காளர்களும், 2,93,654 பெண் வாக்காளர்களும், 8 திருநங்கைகளும் உள்ளனர். இதன் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைவிட தற்போது 7,081 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ஏற்கெனவே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் விவரத்தில் தவறுகள் இருப்பின் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பாக உரிய படிவங்களை அளித்தல் உள்ளிட்டவற்றுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை மனு அளிக்கலாம். அதேபோல, பெயர் நீக்கம் செய்பவர்களும் செய்து கொள்ளலாம். இதற்காக அக்டோபர் 7, 21-ஆம் தேதிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. அக்டோபர் 8, 22-ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும் என்றார்.
மேலும், தமிழக அரசின் சார்பில் செட் டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால் தனியார், கேபிள் ஆபரேட்டர்கள் எவரேனும் கட்டாயப்படுத்தி வேறு செட் டாப் பாக்ஸ்களை போடச் சொல்வதாக புகார்கள் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.