உதகை அருகே சோலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பழங்குடியினர் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது குறும்பர் பள்ளம் பகுதியிலுள்ள குடிநீர்க் குழாய்களைச் சுத்தம் செய்யவும், அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள இரண்டு பணியாளர்களை அமர்த்தவும், மேல்தக்கல் பகுதிக்கு கூடுதலாக மின் மோட்டார், தொட்டிகள் அமைக்கவும், தொட்டலிங்கி பகுதியில் உள்ள ரப்பர் குழாய்களை மாற்றவும், அப்பகுதியில் வடிகால்களை அமைக்கவும், பட்டா இல்லாத வீடுகளைக் கணக்கெடுத்து அவர்களுக்குப் பட்டா வழங்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், மோசமான நிலையிலுள்ள வீடுகளைக் கணக்கெடுத்து அவற்றைச் சீரமைக்கவும், கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்டித் தரவும், கிராம வனக் குழு ஏற்படுத்தி மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்குமாறும் பழங்குடியின பெண்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பொக்காபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியை ஆய்வு செய்து மாணவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, மாணவர்களுடன் மதிய சத்துணவை உண்டார். ஆய்வின்போது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் கலைமன்னன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜகோபால், சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.