கோத்தகிரியில் சொகுசு விடுதிக்கு சாலை அமைக்கும் பணிக்காக அனுமதியில்லாமல் இயக்கப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தார்.
மலை மாவட்டமான நீலகிரியில் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தவும், ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்துள்ளார். மேலும், இதனைத் தீவிரமாகக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கோத்தகிரி அருகே தப்பக்கம்பையில் தனியார் சொகுசு விடுதிக்கு சாலை அமைக்கும் பணியில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பொக்லைன் இயந்திரம் இயக்கப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்குப் பின் உரிமையாளர் மீது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் கீதாபிரியா தெரிவித்தார்.