கூடலூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ.திராவிடமணி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் உள்ள டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகள் அறைக்குச் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெங்கு பாதித்த நோயாளிகளை சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்ப மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். கூடலூர் நகராட்சி நிர்வாகம் நகரில் முறையாக குப்பைகளை அகற்றுவதில்லை. பல இடங்களிலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து கேட்டால் குப்பை கொட்ட இடமில்லை என்று கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் பலனில்லை. டெங்கு காய்ச்சலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.