இந்தியாவில் அரசுகள் மாறினாலும், ஆட்சியாளர்கள் மாறினாலும் வெளியுறவுத் துறையின் கொள்கைககள் மட்டும் இன்னமும் ஸ்திரமாகவே இருப்பதாக வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
உதகையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: இந்தியாவில் ஆட்சிகள் மாறினாலும், அரசுகள் மாறினாலும் வெளியுறவுத் துறையின் கொள்கைகள் இன்னமும் ஸ்திரமாகவே உள்ளன. இதன் காரணமாகவே ரஷியா, சீனா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான இந்தியாவின் நட்பு தொடர்ந்து அதே நிலையிலேயே நீடிக்கிறது.
அடுத்த நூற்றாண்டிலும் இந்தியாவிலுள்ள இளைஞர்கள் தங்களது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை இந்தியாவின் வளர்ச்சிக்காகவே வெளிப்படுத்துவர் என்பதால் இந்தியர்கள் எவரும் வெளியுறவுத் துறையின் கொள்கைகள் குறித்து எப்போதும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய திட்டத்தை நீலகிரி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா மாவட்டங்களிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கட்டாயமாக்கப்படவும் வேண்டும். அனைத்து இளைஞர்களும் தங்களது எதிர்காலத்தை மாணவப் பருவத்திலேயே தீர்மானித்து அதற்கேற்றாற்போல செயல்பட வேண்டும் என்றார்.
கர்நாடக மாநில முன்னாள் தலைமைச் செயலர் சுதாகர் ராவ், குட்ஷெப்பர்டு சர்வதேச பள்ளியின் முதல்வர் பி.சி.தாமஸ், பள்ளியின் துணை முதல்வர் எல்சம்மா தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.