ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான இளம்பெண்ணை துறவற வாழ்வுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.
உதகையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் சேத்னா ஜெயின் (25), எம்பிஏ படித்துள்ளார். அத்துடன் மதம் சார்ந்த ஜெயினாலஜி படிப்பையும் படித்துள்ள இவர் திடீரென துறவற வாழ்வை மேற்கொள்ள முடிவெடுத்தார். ஜெயின் சமூகத்தில் துறவறம் மேற்கொள்வது மிகவும் கடினமானதாகும். துறவிகள் அதிகாலையில் சூரியன் உதித்து 48 நிமிடங்கள் கழிந்த பின்னரே தண்ணீர், உணவு உள்ளிட்ட எதையுமே உட்கொள்ள வேண்டும். அதேபோல, சூரியன் மறைந்த பின்னர் எதையும் உண்ணக் கூடாது. அந்த உணவையும் சைவ உணவை உட்கொள்ளும் வீடுகளிலிருந்து பிட்சையாகப் பெற்றே உண்ண வேண்டும்.
மேலும், இவர்கள் தங்களது ஆயுள்காலம் வரை நடைப்பயணமே மேற்கொள்ள வேண்டும். காலணி அணிய கூடாது. கையில் பணம் எதையும் வைத்திருக்கக் கூடாது.
சொந்த உறவுகளை விட்டுவிட்டு மத குருக்களின் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்படுவர்.
இந்நிலையில், சேத்னா ஜெயின் பெற்றோரின் சம்மதத்துடன் அவரை துறவறத்துக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜெயின் சமூகத்தினர் ஒன்றுகூடி சேத்னா ஜெயினை அலங்கரித்த ரதத்தில் ஏற்றி மேளதாளத்துடன் முக்கியச் சாலைகள் வழியாக நகரைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஜெயின் சமூகத்தினரும், பொதுமக்களும் சேத்னாவை வாழ்த்தி துறவறத்துக்கு வழியனுப்பி வைத்தனர்.
துறவறத்துக்கு இளம்பெண்ணை வழியனுப்பும் நிகழ்ச்சி உதகையில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.