கீழுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக விவசாயிகள் முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
பெங்கால்மட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளோம். இச்சங்கத்தில் இருந்து விவசாயத் தொழிலை மேம்படுத்த கடன் கேட்டு பெரும்பாலான விவசாயிகள் விண்ணப்பித்தும் இன்று வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் போதிய நிதியில்லை
எனக் கூறுகின்றனர். இதனால், 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து உதகையில் உள்ள
மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்தும் கூட கூட்டுறவுச் சங்க நிர்வாகங்கள், சுய லாபத்துக்காக வசதி படைத்தவர்களுக்கு மட்டும் கடன் வழங்கி அப்பாவி விவசாயிகளை புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலை நீடிக்கும்பட்சத்தில் விரைவில் கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதுடன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடிவு
செய்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.