கூடலூர் சுற்று வட்டாரப் பகுதியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய்க் கோட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு, பகலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கூடலூர், பந்தலூர், தேவாலா பகுதிகளை மையமாகக் கொண்டுள்ள நீர் நிலைகளான பாண்டியாறு, புத்தூர்வயல் ஆறு, தேவாலா மலைத் தொடரில் உருவாகும் பொன்னாணி ஆறு உள்ளிட்ட ஆறுகள், சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிக் காணப்படுகின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் பாயும் மாயாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிவதாலும், தொடர்ந்து மழை பெய்வதாலும் கடும் குளிர் நிலவுகிறது.இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.