நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஒட்டுமொத்த கள ஆய்வில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 134 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு, ரூ. 26,000 அபராதமாகவும் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடத்தில் ஏற்படுத்துவதற்காக நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி அலுவலர்களால் ஒட்டுமொத்த களஆய்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதற்காக குன்னூர் நகராட்சியில் 3 குழுக்களும், உதகை, நெல்லியாளம் நகராட்சிகளில் தலா 2 குழுக்களும், கூடலூர் நகராட்சியில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருந்தன.
இக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சுற்றுலா, வெளியூர் வாகனங்களை ஆய்வு செய்ததில் அவர்களிடமிருந்து சுமார் 134 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கு மாற்றாக அவர்களுக்கு துணிப் பைகளை வழங்கிய அலுவலர்கள் ரூ. 26,000 அபராதமாகவும் விதித்தனர்.
இதேபோல, உதகை நகராட்சி மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நகர்மன்ற அலுவலர்களுடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்பாக சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.