நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின்நிலையங்கள் உள்ளன. பல்வேறு அணைகளில் தேக்கிவைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், குந்தா 60 மெகாவாட், கெத்தை 175 மெகாவாட், பரளி 180 மெகாவாட், பில்லூர் 100 மெகாவாட், அவலாஞ்சி 40 மெகாவாட், காட்டுகுப்பை 30 மெகாவாட், சிங்காரா150 மெகாவாட், பைக்காரா 59.2 மெகாவாட், பைக்காரா மைக்ரோ 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ 0.70 மெகாவாட், மாயாறு 36 மெகாவாட், மரவகண்டி 0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் தண்ணீர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அப்பர்பவானி அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் தற்போது நீர் இருப்பு 163 அடியாக உயர்ந்துள்ளது. எமரால்டு அணையில் 114 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணைகளில் உள்ள நீரின் மூலம் மின்நிலையங்களில் ஓராண்டுக்கு மின் உற்பத்தி மேற்கொள்வதில் தடை ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி மாவட்ட அணைகளின்
நீர் இருப்பு விவரம் வருமாறு
அணைகள் கொள்ளளவு (அடியில்) நீர் இருப்பு
முக்குருத்தி 18 15
பைக்காரா 100 94.5
சான்டிநள்ளா 49 44
கிளன்மார்கன் 33 32
மாயாறு 17 15
அப்பர்பவானி 210 163
பார்ஸன்ஸ்வேலி 58 52
போர்த்திமந்து 130 112
அவலாஞ்சி 171 115
எமரால்டு 184 114
குந்தா 89 89
கெத்தை 156 156