குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பூக் குண்டம் இறங்கினர்.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த, 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூச்சாட்டு, கரக ஊர்வலம், சிம்ம வாகனப் புறப்பாடு, திருக்கல்யாணம், காமதேனு வாகன ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதையொட்டி, காலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் இருந்து தந்தி மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர்.
இதன்பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தன.
மாரியம்மன் கோயிலில் இருந்து அம்மன் திருவீதி உலா துவங்கி வி.பி., தெரு பூக் குண்டம் மைதானத்தை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜை நடத்திய பிறகு, பக்தர்கள் வரிசையில் நின்று பூக் குண்டம் இறங்கினர்.
விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் மவுண்ட் ரோடு, பேருந்து நிலையம், வி.பி., தெரு உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நற்பணி மன்றத்தினர், விவேகானந்தா நற்பணி மன்றத்தினர், தாசப் பளஞ்சிக இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.