கூடலூரை அடுத்துள்ள புத்தூர்வயல் பகுதியில் துப்பாக்கியுடன் நடமாடியவரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புத்தூர்வயல் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் இரண்டு பேர் நடமாடுவதாக கூடலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், சதீஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை போட்டுவிட்டு ஒருவர் தப்பி ஓடினார்.
அவருடன் வந்த நஞ்சுண்டன் (69) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தினர். தப்பி ஓடிய கணேசன் என்பவரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.