பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கோத்தகிரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோத்தகிரியை அடுத்துள்ள அரவேனு தவிட்டுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் லெனின் ராஜ் (36), கூலித் தொழிலாளி. இவர் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் லெனின் ராஜுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலை அருகே பேருந்தை நிறுத்தி, பயணி லெனின் ராஜை கண்டக்டர் இறக்கிவிட்டார்.
மீண்டும் பேருந்து புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின் சக்கரம் லெனின் ராஜின் கால்கள் மீது ஏறி இறங்கியது. இதில் அவரின் ஒரு கால் துண்டானது. மற்றொரு கால் நசுங்கியது.
பலத்த காயம் அடைந்த லெனின் ராஜ் அலறிய சப்தம் கேட்டு சக பயணிகள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லெனின் ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இரவு வரை நீடித்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.