மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை, காமராஜர் நகர், இரியசீகை, ஜேஜே நகர், தனியகண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடர்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இங்கிருந்து உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடமான், புலி உள்ளிட்டபல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புகளில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் அவ்வப்போது கால்நடைகளையும் வேட்டையாடிச் செல்கின்றன.
கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் குட்டியுடன் வரும் 8 யானைகள்கிண்ணக்கொரை கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பை கடந்த வியாழக்கிழமை யானைகள் உடைத்து சேதப்படுத்தின. குந்தா வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகள்தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்.