உதகை ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை விற்கும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விடை கொடுத்து இலைக்கு மாறியுள்ளது தன்னார்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். சில பகுதிகளிலும் மட்டும் சில வியாபாரிகள் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
இதன் ஒரு பகுதியாக, உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினர் தொடர் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக உதகை நகராட்சி மற்றும் குன்னூரில் உள்ள சில இறைச்சிக் கடை வியாபாரிகள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்துள்ளனர்.
கடைகளுக்கு மீன், இறைச்சி வாங்க வருபவர்களுக்கு வாழை இலை மற்றும் பேப்பர் மூலம் பார்சல் செய்து தருகின்றனர். மலை மாவட்டத்தில் வாழை இலை கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதால் இறைச்சிகளை பார்சல் செய்ய மாற்றுப் பொருள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.