உதகை ரோஸ் கார்டன் சாலையில் அபாய நிலையில் உள்ள 6 மரங்களை வெட்டி அகற்ற தோட்டக் கலைத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நூறாண்டு பழமையான மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மரங்கள் சாலைகளில் விழுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சாலையோரத்தில் இருந்த பெரிய மரம் விழுந்ததில் 3 பேர் பலியாயினர்.
இதையடுத்து அபாய நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என மாவட்ட கமிட்டியிடம் பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். கமிட்டியினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உதகை ரோஸ் கார்டன் சாலையில் அபாய நிலையில் உள்ள மரங்களை ஆட்சியர் உத்தரவுப்படி கமிட்டியினர் ஆய்வு செய்தனர்.
பின், தோட்டக் கலைத் துறைக்குச் சொந்தமான மரங்கள் என்பதால் அவற்றை அகற்ற தோட்டக் கலைத் துறைக்கு உத்தரவிட்டனர். மாவட்ட கமிட்டி உத்தரவை அடுத்து அபாய நிலையில் உள்ள 6 மரங்களை வெட்டி அகற்ற டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.