வால்பாறை மலைப் பகுதியில் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அக்கட்சியின் வால்பாறை நகரச் செயலாளர் பி.பரமசிவம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலையில், மலைகளால் சூழப்பட்ட பகுதி வால்பாறையாகும். இது வருடத்தில் அதிகப்படியான மழை பொழியும் பகுதியும் ஆகும்.
வால்பாறை அரசுப் போக்குவரத்துக்கழகக் கிளை மூலமாக வெளியூர்களுக்கு 18 பேருந்துகளும், வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு 19 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதில், பெரும்பாலான பேருந்துகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால், பயணிகள் உயிர் பயத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
மழை காலத்தில் மேற்கூரை வழியாக பேருந்துக்குள் மழை நீர் ஒழுகுவதால், பயணிகள் பேருந்தில் பாதுகாப்பாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற மலைப் பகுதிகளில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் வால்பாறைக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஒரு புதிய பேருந்து கூட ஒதுக்கப்படவில்லை.
எனவே, இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய பேருந்துகள் ஒதுக்குவதுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்துகளையும் பழுது நீக்கித் தரமான, பாதுகாப்பான பேருந்துகளாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.