இந்தியன் வங்கி மூலம் வால்பாறை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
வால்பாறை காருண்யா சமூக மையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் கே.ராமகிருஷணன், கிளை மேலாளர் டி.யுவராஜ், உதவி கிளை மேலாளர் ஒ.காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காருண்யா சமூக மையங்களின் இயக்குநர் அனிலா மேத்யு வரவேற்றார்.
விழாவிற்கு தலைமையேற்று காருண்யா சமூக மையம் சார்பில் அமைக்கப்பட்ட 21 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் கடனுதவியை வழங்கி இந்தியன் வங்கியின் ஊரக வளர்ச்சித் துறை பொதுமேலாளர் டி. தேவராஜ் பேசுகையில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இதுவரை வங்கி மூலம் ரூ.4250 கோடி கடனுதவி வழங்கப்பட்டுளளது. மேலும் கடனுதவியை விரிவுப்படுத்தும் நோக்கமாக காருண்யா போன்ற பல்வேறு சமூக மையங்கள் மூலம் அமைக்கப்படும் குழுக்களுக்கு கூடுதல் கடன் உதவி வழங்கப்படும் என்றார்.