கூடலூர் அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
கூடலூர், கோழிப்பாலத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை சக மாணவர்கள் மீது ஈவ் டீசிங் புகார் கொடுக்குமாறு தமிழ்த் துறை பேராசிரியர் ஒருவர் வலியுறுத்தியதாக மாணவர்களுக்குத் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, மாணவர்கள் அந்த மாணவியிடம் விசாரித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த மாணவர்கள், மாணவியை புகார் கொடுக்க வற்புறுத்திய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் போலீஸார் விரைந்துவந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆயினும் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் கல்லூரி முதல்வர் பழனிசாமி மாலையில் கல்லூரிக்கு வந்தார். நடந்த சம்பவம் குறித்து முதல்வர் அந்தப் பேராசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.