செயற்கை உரத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளைத் தடுக்க, நீலகிரியில் இயற்கை உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடியும், மலைக்காய்கறி சாகுபடியும் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்குத் தேவையான உரம், களைக்கொல்லி மருந்துகளை, கூட்டுறவு நிறுவனம், தனியார் உரக் கம்பெனிகள் மூலம் விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெறும் பயிர்க்கடனில் 75 சதவீதம் பணமாகவும், 25 சதவீதம் உரமாகவும் வழங்கப்படுகிறது.
கடன் அளவைப் பொருத்து, கூட்டுறவு சங்கம் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 50 டன் அளவுக்கு தேயிலைத் தோட்டங்களுக்கு உரம் வழங்கப்படுகிறது. இம்மாவட்டத்தைப் பொருத்த வரையில், 75 சதவீதம் செயற்கை உரத்தை விவசாயிகள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
சமீபத்திய ஆய்வில், இம்மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயன உரத்தால், தொழிலாளர்கள் பலர், சிறுநீரக நோய், புற்றுநோய், தோல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, நீலகிரியில் வரும் காலங்களில் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுக்க அரசு பல கட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
செயற்கை உரப் பயன்பாட்டால், நீர்நிலைகள் மாசடைந்து வருவதால் வன விலங்குகளுக்கும் பாதிப்பு நேரிடுகிறது. இதைத் தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.