கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இரண்டு புலிக்குட்டிகள் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட பில்சோனா சரகம் வனப் பகுதியிலுள்ள அவரல்லா பீட்டில் இரண்டு புலிக்குட்டிகள் இறந்து கிடப்பதாக, வனச்சரக அலுவலர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை ஆய்வு செய்த வனத் துறையினர், கால்நடை மருத்துவர் கலைவாணியை வரவழைத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.
பிறந்து சுமார் 15 நாள்களே ஆன குட்டிகளை ஆண் புலி தாக்கிக் கொன்றிருக்கலாம் என்று வனத் துறையினர் தெரிவித்தனர். புலிக்குட்டிகள் இறந்துகிடந்த இடத்தில் கள இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, உதவி கள இயக்குநர்கள் புஷ்பாகரன், சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.