மஞ்சூர் அருகே உள்ள கீழ்குந்தாஅரசுப் பள்ளியில் காட்டு யானைகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூரை அடுத்துள்ள கீழ்குந்தாவில் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் மஞ்சூர், குந்தா பாலம், ஓணிகண்டி, அண்ணாநகர், கீழ்குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 3 காட்டு யானைகள் கெத்தை-மஞ்சூர் வழியாக கீழ்குந்தா அரசு நடுநிலைப் பள்ளிக்குள் நுழைந்தன. பின்னர், அங்கிருந்த குடிநீர்த் தொட்டி, குடிநீர்க் குழாய்கள் மட்டுமல்லாமல் பள்ளியின் பெயர்ப் பலககைளையும் உடைத்துச் சென்றன. இதையறிந்ததும் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் பள்ளிக்கு வந்து யானைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். ஆனால், காட்டு யானைகள் மீண்டும் கெத்தை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன. மேலும், தொடர்ந்து காட்டுயானைகள் கிராம பகுதிக்குள் ஊடுருவாமல் இருக்க வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.