காவல் துறை சார்பில் கூடலூரை அடுத்துள்ள பழங்குடி கிராமங்களில் வனப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் மசினகுடி, அம்பலமூலா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நாகம்பள்ளி, பிதர்க்காடு பகுதியில் உள்ள பழங்குடி கிராமங்களில் வனப் பொங்கல் கொண்டாடப்பட்டது. பழங்குடி மக்களுக்குத் தேவையான கரும்பு, இனிப்பு வகைகளைக் காவல் துறையினர் வழங்கி பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினர்.
உதகையில் உள்ள ஜெயின் மகிலா மன்றம் சார்பில் புத்தாடைகளும், முத்தூட் நிறுவனம் சார்பில் வீட்டு உபயோகப் பொருள்களும் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் பிதர்க்காடு பகுதியில் உள்ள 21 பழுதடைந்த வீடுகள் புதுப்பித்து வழங்கப்பட்டன. மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா, ரெட் கிராஸ் தலைவர் கே.ஆர்.மணி ஆகியோர் பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில், கூடலூர் டி.எஸ்.பி. ரவிசங்கர், மசினகுடி காவல் ஆய்வாளர் சிவசங்கர், உதவி ஆய்வாளர் சம்பத், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் சுபாஷினி உத்தரவின்பேரில் விஜயன், மகேஷ்குமார், சித்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.