நிலச்சரிவு ஏற்பட்ட கூடலூர் - மைசூரு சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில், மரப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
கனரக வாகனங்கள் சென்றால் சாலை முற்றிலும் சேதமடையும் நிலை ஏற்பட்டதால் சாலையின் நடுப் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி ஒருபுறம் மட்டும் வாகனங்கள் சென்றுவர வழி ஏற்படுத்தப்பட்டது.
கர்நாடகம் - தமிழகம் - கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான இது, பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
எனவே, நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்கும் விதமாகத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.