நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக உயிருக்குப் போராடி வந்த காட்டு யானை புதன்கிழமை உயிரிழந்தது.
சேரம்பாடி கண்ணம்பள்ளி தனியார் எஸ்டேட்டில் உடல்நலக் குறைவால் நடக்க முடியாமல் கீழே விழுந்து கிடந்த சுமார் 15 வயதுடைய ஆண் யானைக்கு கேரள மாநிலம், முத்தங்கா சரணாலயத்தில் இருந்து கால்நடை மருத்துவர் அருண்சத்தியனை வரவழைத்து வனத் துறையினர் சிகிச்சை அளித்தனர். ஆனாலும், யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், அந்த யானை புதன்கிழமை மாலை உயிரிழந்தது. கால்நடை மருத்துவர்கள் மனோகரன், பிரபு ஆகியோர் யானையின் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் அதே இடத்தில் யானை புதைக்கப்பட்டது.