கோத்தகிரியில் விதிகளை மீறி பொக்லைன் இயக்கியவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
கோத்தகிரியில் விதிகளை மீறி பொக்லைன் வாகனத்தை இயக்கியவருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், விவசாய நிலங்களை அழித்து சமன் செய்வது, பாறைகளை உடைப்பது, தேவைக்கு அப்பாற்பட்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோத்தகிரி, குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் விதிகளை மீறி இந்தப் பணிகள் தொடருகின்றன.
சமவெளியை சார்ந்தவர்கள், இங்குள்ள நிலங்களை வாங்கி தங்களது தேவைக்கேற்ப விவசாய நிலங்களை அழித்து தங்கும் விடுதி மற்றும் சொகுசு பங்களாக்களை கட்டி வருகின்றனர்.
குடியிருப்புகள் என்ற பெயரில் அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களில் அனுமதி பெறும் இவர்கள், குடியிருப்புக்கான அரசு நிர்ணயித்துள்ள பரப்பளவைவிட பல மடங்கு பரப்பளவில் கட்டுமானங்களை கட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கோத்தகிரி - குன்னூர் சாலையில் கட்டபெட்டு பவர் ஹவுஸ் பகுதியை ஒட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் விவசாய நிலத்தை சமன் செய்துவருவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பணியை நிறுத்தி பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து கோத்தகிரி வட்டாட்சியர் தனபாக்கியத்திடம் கேட்டபோது, அனுமதியில்லாமல் கட்டுமானப் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் விவசாய நிலங்களை அழிப்பதாக தகவல் வந்தது. அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இப்பிரச்னை தொடர்பான அறிக்கை குன்னூர் கோட்டாட்சியர் பத்ரிநாத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர் மணி, பொக்லைன் ஓட்டுநர் பிரகாஷ் ஆகியோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நகரில் இதுபோன்ற விதிமீறல்கள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.